Friday 2 March 2012



                 ன்று மேற்கத்திய நாடுகள் நம் இந்தியா நோக்கி பார்வையைத் திருப்பியிருப்பது இரு விஷயங்களுக்காக. ஒன்று இந்திய குடும்ப அமைப்பு,  மற்றொன்று நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும்  தரும் யோகா, தியானம்.

மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் யோகா, தியான பயிற்சி மையங்கள் பல செயல்பட்டு வருகின்றன.  கடுமையான உடற்பயிற்சி செய்து பெறும் பலனை யோகாசனம், தியானம் மூலம் எளிதில் பெறலாம்.

உடலும் மனமும் சீர்பெற யோகா அவசியம் தேவைப்படுகிறது.  பழங்காலத்தில் குருகுல வாசத்தில் யோகா சொல்லிக் கொடுக்கப்பட்டது.  ஆங்கில படிப்பு மோகத்தால் குருகுல வாசத்தையும் இழந்து அரிய பொக்கிஷமாக அங்கே போதிக்கப்பட்ட யோகா, தியான முறைகளையும் இழந்தோம்.  இறுதியில் நோயின் தாக்குதலுக்கு ஆளாகி மன உளைச்சலுடன் அவதியுறுகிறோம்.  மீண்டும் தற்போது பல யோகவல்லுனர்கள் பதஞ்சலி முனிவரின்  யோகா முறையைப் பயன்படுத்தி பலருக்கு கற்றுக் கொடுக்கின்றன.  இன்று இலட்சக்கணக்கானோர் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு தினமும் யோகா செய்கின்றனர்.

பல நிறுவனங்கள் யோகா ஆசிரியரை நியமித்து வார இறுதி நாட்களில் பயிற்சி கொடுக்கின்றன.

இத்தகைய யோகாசனங்கள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் யோக முத்ரா என்ற யோகாசனம் பற்றி அறிந்துகொள்வோம்.

செய்முறை

முன் செய்த பத்மாசன நிலையில் அமர்ந்து கொண்டு கைகளை பின்புறம் அதாவது முதுகுப் புறம் கொண்டு சென்று இடது கை மணிக்கட்டுப் பகுதியை வலது கையால் பிடித்துக்கொண்டு உடலை முன்னோக்கிக் குனிந்து தாடையால் தரையைத் தொட முயற்சிக்கவும்.

பத்மாசனத்தின்  போது போட்ட கால்களை மாற்றிப்போட்டு செய்யவும்.  கீழ் இடுப்புப் பகுதியை (மூலாதாரத்தை) நினைவில் கொண்டு இயல்பான சுவாசத்தில் இருந்து கொண்டு தலையையும் தோளையும் முன்குனிந்தால் எளிதாய் வரும்.

பயன்கள்

· தொப்பை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும்.  செரிமான சக்தி அதிகரிக்கும்.

· உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.  வயிற்றுப் புண், குடலிறக்கம், விதைப்பை வீக்கம் போன்ற நோய்கள் நீங்கும்

· பெண்களுக்கு சிறந்த ஆசனமாகும்.  கர்ப்பப்பை இறக்கம், தொப்பை, அடிவயிறு கனம், தொடை சதை கனம், இடுப்பு வலி நீங்கும்.

· மனதை மூலாதாரத்தில் வைத்து செய்ய உடலில் பிராண சக்தி அதிகரிப்பதால் உடல் வனப்பும் உறுதியும் பெருகும்.

· சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்ய ஏற்ற ஆசனம் இது.

· கர்ப்பிணிப் பெண்கள், நோயால் அவதியுறுபவர்கள் இவ்வாசனத்தை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment